ஹம்பாந்தோட்டையை போதைப்பொருள் மையமாக மாற்றிய ஈரானியர்கள்!
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதாக சந்தேகிக்கப்படும் வகையில், ஹம்பாந்தோட்டையில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய உபகரணங்கள், ரசாயனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
களுத்துறை குற்றப்பிரிவு விசாரணைக் குழுவின் தடுப்பு உத்தரவின் பேரில் விசாரிக்கப்படும் “எம்பிலிப்பிட்டியே சுரங்க” என்பவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டன.
ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 52 லீற்றர் ரசாயனங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய 13 கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு சொகுசு கார், விடுதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள பாணந்துறை நிலங்கா என்பவரால் இந்த கார் ஐஸ் போதைப்பொருள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொலிஸ் அதிகாரியால் ஹெரோய்ன் கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்ட அதே கார் என்றும் பொலிஸார் கூறினர்.
ஹம்பாந்தோட்டை மாயூரபுர பகுதியில் அமைந்துள்ள அந்த விடுதியில் பல ஈரானியர்களும், உள்ளூர் மக்களும் இந்த ஐஸ் போதைப்பொருளை தயாரித்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற சந்தேக நபர்களைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

