புதினங்களின் சங்கமம்

ஊழலுக்கு அத்திவாரம் போடுவது எப்படி? மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரனின் திருவிளையடல்!!

கடலட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்திருந்தால் அரை ஏக்கருக்கு அரசுங்கத்திற்கு பணம் கட்டினால் போதும் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணையாளர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்த காணொளி வெளிவந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சி காலங்களில் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக சந்திரசேகரன் கருத்து தெரிவித்து வந்தார்.

தற்போது அமைச்சராக உள்ள நிலையில் சட்ட விரோதமாக கடலட்டைப் பண்ணைகளை மேற்கொண்டு வருகின்றவர்களை பாதுகாக்கும் பொருட்டும் அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமையை காண முடிகிறது.

கடந்த காலங்களில் சீனர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் கடல் அட்டை குஞ்சு பொரிக்கும் நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக வடக்கு மக்களின் உணவு தட்டில் அடங்காத கடலட்டையை ஊக்குவிக்கும் முகமாக அமைச்சர் சந்திரசேகரன் செயற்படுவது சீனாவின் தூண்டுதலாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில் ஆழம் குறைந்த யாழ்குடா கடற்பரப்பில் பாரம்பரிய மீன் பிடியை நம்பி பல மீனவ மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடலட்டைப் பண்ணைகளை மீள ஏக்கர் கணக்கில் வழங்க முற்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பல் தேசிய கம்பனிகளை ஊக்குவிக்கும் செயற்பாடா என கேள்வி எழுப்புகின்றனர்.