புதினங்களின் சங்கமம்

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!

கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களைப் பரீட்சைக்குத் தோற்றிய சில மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சமர்ப்பித்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின், வினாத்தாளிலிருந்து 3 வினாக்கள் கசிந்தமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பரீட்சையை மீண்டும் நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், கசிந்ததாக உறுதிசெய்யப்பட்ட 3 வினாக்களுக்கான முழுமையான புள்ளிகளைச் சகல மாணவர்களுக்கும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இவ்வாறான பின்னணியில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.