புதினங்களின் சங்கமம்

ரிஷாட்டின் ஆதரவாளர்கள் மீது துரத்தித் துரத்தித் தாக்குதல்!! அம்பாறையில் பதற்றம்!! (video)

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் ஒலிவில் துறைமுக அதிகாரசபை தங்குமிடம் பகுதியில் இன்று ஊடகமொன்றிற்கு செவ்வி வழங்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தொடர்பாக மேற்குறித்த ஊடக நேரலை செவ்வியில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் ஆதரவாளர்கள் என தெரிவித்த சிலர் திடீர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு அப்பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் அப்துல்லா மஃறூப் காயங்கள் எதுவும் இன்றி தப்பியதுடன் அவரது வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அப்பகுதியில் சிறிது பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.