யாழில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் 3 பேர் கைது!!
யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
அதனால் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டமேற்படுத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மூவரை கைது செய்துள்ளனர்.
அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களையே பொலிஸார் கைது செய்து , அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய குழுவினரை அழைத்து வந்து ஊடகவியலாளரின் வீட்டை அடையாளம் காட்டியவர் மற்றும் தாக்குதல் மேற்கொண்ட இருவர் என மூவர் அச்சுவேலிப் பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யார் தலைமையில், எதற்காக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட குழுவுக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து பணம் வந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

