புதினங்களின் சங்கமம்

கொழும்பு மொரட்டுவையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஜயனி!!

பத்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 50,720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ‘குடு ஜயனி’ என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டதாக வளன மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.போதைப்பொருள் விற்பனைக்காக அவரால் பணியமர்த்தப்பட்ட அவரது பிரதான அடியாட்களில் ஒருவரும் எகொட உயன கடற்கரையில் 3,520 மில்லிகிராம் போதைப்பொருள் ஐஸ் உடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை மற்றும் கொரளவெல்ல பிரதேசங்களை மையமாக கொண்டு பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் இப்பெண் தொடர்பில் மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட போதைப்பொருள் மொரட்டுவை, மோதரை, கொரலவெல்ல மற்றும் லுனாவ பிரதேசங்களில் குடு ஜயனியால் பணியமர்த்தப்பட்ட அடியாளால் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

குடு ஜயனியின் கணவர் மற்றும் மூன்று சகோதரர்கள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்டு மஹர மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.