யாழ் மாநகரசபைக்கு முன் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!! முடங்குமா மாநகரசபை??
‘5ஜி தொழில்நுட்பம் மனித குலத்தின் எதிரி எம்மில் அதைப் பரிசோதிக்காதே!’ என்ற
கோரிக்கையை முன்வைத்துப் பத்துக்கு மேற்பட்ட பொது அமைப்புகள் மக்களுடன்
இணைந்து கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக நாளை வியாழக்கிழமை மு.ப. 9 மணியளவில்
இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மருத்துவர் குழு, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, இலங்கை ஆசிரியர்
சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், தேசிய கலை இலக்கியப் பேரவை, வல்லமை,
கிராமிய உழைப்பாளர் சங்கம், சைவ மகாசபை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தேசிய
மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், சமூக மேம்பாட்டு அமையம், புதிய ஜனநாயக மாக்சிச
லெனினிசக் கட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து துண்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாண மாவட்டத்தின் மக்கள் செறிவாக வாழ்கின்ற பல இடங்களிலும் சுமார் 80
அடி உயரமான கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன. இவை அதியுச்ச திறன்கொண்டதும்
முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி பன்னாட்டு அங்கீகாரத்தைப்
பெற்றுக்கொள்ளாததும் மாறாகப் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள்,
ஆய்வாளர்கள், மருத்துவத்துறை சார்ந்தோர் மற்றும் சூழலியலாளர்களால்
வன்மையாக எதிர்க்கப்படுகின்றதுமான, ஐந்தாவது தலைமுறைத்
தொலைத்தொடர்புத் தொழில்நுட்பமான 5ஜி அலைக்கற்றைகளுக்கானவை என்று
அறியக்கூடியதாக இருக்கின்றது.
மக்களின் எதிர்ப்புகளைக் கவனத்தில் எடுத்து, இந்தச் செயற்பாட்டை தடுத்து
நிறுத்துவதற்கு இதுவரை எந்தவொரு உள்ளூராட்சிச் சபைகளோ, மாகாண, கொழும்பு
அரசுகளின் இதனுடன் தொடர்புடைய திணைக்களங்களோ, அரசியல்வாதிகளோ
முன்வராமை பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றது.
இந்த 5ஜி தொழில்நுட்பமானது, பொருள்களின் இணையம், தானியங்கி வாகனங்கள்,
தீவிர உயர் வரையறை காணொலி போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்கானது.
பல்தேசியக் நிறுவனங்கள், இத்தகைய செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தையும்
தானியங்கல் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியதன் மூலம்,
ஏராளமானோருக்கு வேலையிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
மண்ணிலும் விண்ணிலும் 5ஜியை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான
பன்னாட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பில், இதுவரை 187
நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டுள்ளனர்.
*பாதிப்புக்கள்*
5ஜி தொழில்நுட்பமானது, மக்களை மின் உணர்திறன்மிக்கவர்களாக
மாற்றிவிடும். மின்காந்தப் புலத்தின் தாக்கத்துக்கு உள்ளாகுபவர்கள், மின்
உணர்திறன் மிக்கவர்களாக மாறுகிறார்கள். மறதி, கவனஞ்செலுத்த இயலாமை,
இதயத்துடிப்பு அதிகரித்தல், சோர்வும் களைப்பும், காது, கண் போன்றவற்றில் வலி
ஏற்படுதல், வீங்குதல் போன்றன அவற்றில் சில. இது பலசமயங்களில்
நிரந்தரமான உடலியல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும்.
மருத்துவத் தேவைகளுக்கும் கல்வி, ஆய்வு, பாதுகாப்புத் தேவைகளுக்கும் இந்தத்
தொழில்நுட்பம் அவசியமெனக் கருதினால், அதைத் தேவையான இடங்களில் மிகவும்
கவனமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், மக்கள்
அதிகம் வசிக்காத பகுதிகளில் மேற்கொள்ளவேண்டும்.
எனவே, பரிசோதனை எலிகளாக எம்மைப் பார்க்கின்ற, இந்த ஆபத்தான தொழில்நுட்பத்
திணிப்பை எதிர்த்து அனைவரும் அணிதிரள்வோம் – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

