புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா மாமாவின் திருவிளையாடல்!! யாழ் இளைஞன் கட்டுநாயக்காவில் கைது!!

போலி கனேடிய கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவினர் நேற்று (16) காலை கைது செய்துள்ளனர்.

24 வயதான அந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் கத்தாரின் தோஹா நோக்கிச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விமான அனுமதியின் போது அவர் வழங்கிய கனேடிய கடவுச்சீட்டில் சந்தேகம் எழுந்ததால், அவர் விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மேலதிக விசாரணைக்காக அழைக்கப்பட்டார். அq்கு, அவரது கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபரின் உண்மையான இலங்கை கடவுச்சீட்டும் அவரிடம் காணப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டெடுத்ததாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முதலில் இலங்கை ஏர்லைன்ஸ் கவுன்டர்களில் போலி கனேடிய கடவுச்சீட்டை சமர்ப்பித்து தோஹா சென்று அங்கிருந்து கனடா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் குடிவரவு பிரிவில் மாலத்தீவு செல்வதாக கூறியுள்ளார். கடைசி வாயிலில், Gulf Airlines விமானத்தில் மாலைதீவு செல்வதாக போலி டிக்கெட்டுகளை காட்டி உள்நுழைந்து, தோஹாவுக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் ஏற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில், கனடாவில் உள்ள மாமா ஒருவர் அவரை கனடாவுக்கு அழைக்க உதவியதாகவும், கனடாவில் உள்ள நபர் இலங்கையில் உள்ள தரகர் ஒருவருக்கு 40 லட்சத்தை கொடுத்து இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.