புதினங்களின் சங்கமம்

வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  ஒன்று கூடிய மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் சில ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது. மாணவர்ளை உள்ளூர் முக்கியஸ்தர் ஒருவரும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவரும் துாண்டியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைத்ததாக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பாடசாலைக்கு சென்ற மாணவர்களை பலவந்தமான முறையில் உயர் வகுப்பு மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைத்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரி பழைய மாணவர்கள் சிலர் கடந்த வாரம் திங்கட்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேற்று மதத்தை சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.