புதினங்களின் சங்கமம்

இளையராஜாவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும்…..

இளையராஜா ஐரோப்பாவில் நடைபெறும் ஒவ்வொரு இசைநிகழ்ச்சிக்கும் பெறும் ஊதியம் அண்ணளவாக ஒரு இலட்சம் ஈரோக்கள் என தெரியவருகின்றது.
இந்திய மதிப்பில் இது 90 இலட்சத்திற்கும் மேல்.
ஒரு படத்திற்கு இசையமைக்க அவர் பெறும் ஊதியம் அண்ணளவாக இவ்வளவுதான்.
வெறும் மூன்றுமணி நேரத்தில் இப்பணத்தை ஒரு இசை நிகழ்ச்சியில் அவர் சம்பாதித்துவிடுகின்றார்.
நடிகர் விஜய் இனிவரப்போகும் தன் படத்திற்கு ஊதியமாக 200 கோடியினை பெறவுள்ளதாக தெரிகின்றது.
அண்மையில் வந்து சென்ற அனிருத், யுவன் போன்றவர்கள் கூட ஐரோப்பா இசைநிகழ்ச்சிக்கு பெருமளவான பணத்தை ஊதியமாக பெற்றதாக தெரிகின்றது.
புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக ஈழத்தமிழர்களின் வியாபார சந்தையாக தமிழக சினிமா மாறிப்போயிருப்பதுதான் இதற்கான காரணம்.
நடப்பு ஆண்டில் மலேசியாவில் இதுவரை அண்ணளவாக 40 இசைநிகழ்ச்சிகள் நடந்திருப்பதாக தெரிகின்றது.மலேசியாவைப்பற்றி நாம் கவலைப்படுவதில் அர்த்தமில்லை.
தமிழ்நாட்டுத்தமிழர்கள் மிக அதிகமாக மலேசியாவில் வசிக்கின்றார்கள்.
ஆனால் ஐரோப்பாவில் அப்படியில்லை.
இது ஈழத்தமிழர்களின் பணம் .
எமக்காக இதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத சினிமா வியாபாரிகள் எமது பணத்தை பெருமளவில் அபகரித்துச்செல்வதை அனுமதிக்கமுடியாது..
ஆயிரமாயிரம் விமான குண்டுத்தாக்குதல்கள்,
கைது செய்து காணாமலக்கப்பட்ட பல ஆயிரம் தமிழ் இளையவர்கள்,இறுதியுத்தத்தில் சிங்களத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள்,
தமிழர்நிலங்களெங்கும் இன்றுவரை தொடரும் பல வடிவிலான சிங்கள ஆக்கிரமிப்புக்கள், தோன்றும் இடமெல்லாம் வந்துகொண்டேயிருக்கும் தமிழர்களின் எலும்புக்கூடுகள் என எமக்காக பேச ஆயிரம் விடயங்கள் இருக்கின்றது.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு “ பிழைக்கவந்தவர்கள்” என்னும் ஒரே வார்த்தையில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தியிருக்கின்றார் இளையராஜா..
பிழைப்பதற்காக மோடியிடம் பிச்சை வாங்கும் தன்னைப்போல இளையராஜா ஈழத்தமிழர்களை நினைக்கக்கூடாது.
புலம்பெயர்ந்த ஒவ்வொரு ஈழத்தமிழனின் பின்னாலும் ஒரு கதை இருக்கின்றது.
பகிரமுடியாத ஆயிரம் வலிகள் இருக்கின்றது.
அதையெல்லாம் “ பிழைக்கவந்தவர்கள்” என ஒரே வார்த்தையில் சொல்லிவிட இளையராஜாவிற்கு என்ன உரிமை இருக்கின்றது?
நீங்கள் எங்களிற்காக பேசமாட்டீர்கள் என்பது எமக்கு நன்கு தெரியும்.
பிழைப்பதற்காக இசை நிகழ்ச்சிகளை எம்மிடங்களில் நடத்தும் இளையராஜா எமை “ பிழைக்கவந்தவர்கள்” என சொல்வதை என்னவென்று சொல்வது?…

நன்றி

சமூகவலைத்தளம்….