மனைவியின் வயிற்றையும் நெஞ்சையும் மிதித்தது யானை. – கவீஷாவின் மரணம் தொடர்பில் வாக்குமூலம்!! (Photos)
“நாங்கள் கூடாரம் அருகே இருந்தோம். இரவு 10.30 மணியளவில் யானை வந்தது. யானை எம் அருகில் வராது என்று நினைத்துக் கூடாரத்திற்குள் பதுங்கி இருந்தோம்.
அப்போதுதான் யானை வந்து நாங்கள் இருந்த கூடாரத்தை மிதித்தது” என பண்டாரவளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர்வீழ்ச்சி பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த கவீஷாவின் காதலன் தனுஷ்க மதுஷன் தெரிவித்துள்ளார்.
தியலும நீர்வீழ்ச்சி அருகே கூடாரம் அமைத்து தங்கியிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்த தருஷி கவீஷாவின் மரணம் தொடர்பான விசாரணையின் போதே தனுஷ்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொஸ்லந்த – வெல்லவாய வீதியில் உள்ள மேல் தியலும நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தை எதிர்கொண்ட காதலன் யானை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து சாட்சியம் அளித்த அவர்,
“நாங்கள் இருந்த இடத்தில் கையடக்கதொலைபேசிகளுக்கு சமிக்ஞை கிடைக்கவில்லை. நண்பர்களுக்கு அழைப்பெடுக்க பலமுறை முயற்சித்தேன். அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
சமிக்ஞை இருக்கும் இடத்திற்கு தவழ்ந்து தவழ்ந்து வந்து காலை 5.30 மணியளவில் நண்பர்களுக்கு அழைப்பை எடுத்தேன். அதன் பிறகு எங்களைத் தேடி வந்தனர்.
நேற்று காலை குருநாகலிலிருந்து வந்தோம். அப்புத்தளையில் உள்ள எனது நண்பரின் வீட்டிற்கு வந்து சென்ற பின்னர், மேல் தியலும பகுதிக்கு வந்தபோது மாலை 5.30 மணி ஆகிவிட்டது.
வழியில் எங்களை வழிநடத்த ஒரு இளைஞன் தொடர்பு கொண்டார், அவர் எங்களை மேல் தியலும அழைத்து வந்தார், நான் 1000 ரூபாயை கட்டணமாக செலுத்தினேன்.
பிரதானா சாலையில் இருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல் தியலும நீர்வீழ்ச்சி பகுதியில் சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் கூடாரம் அமைத்தோம். அதன்பிறகு நாங்கள் அங்கேயே தங்குவதற்கு முடிவுசெய்தோம்.
10.30 மணியளவில் யானை வந்தது. சத்தம் வராமல் கூடாரத்திற்குள் பதுங்கியிருந்தோம். யானை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. உடனே வந்து கூடாரத்தை மிதித்தது.
கவீஷாவின் வயிற்றையும் நெஞ்சையும் மிதித்தது. எனது இடது கையும் நசுக்கப்பட்டது. கவீஷா தண்ணீர் கேட்டு கஷ்டப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். கையை குணப்படுத்த முடியுமா என்றும் கேட்டார்.
என் நண்பர்களிடம் பேச நிறைய முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. காலையிலேயே நண்பர்களை தொடர்புகொள்ள முடிந்தது.
காலை 6:30 மணியளவில், கிராம மக்களுடன் இணைந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என குறிப்பிட்டுள்ளார்
இந்த மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை சட்ட வைத்தியர் சானக ரொஷான் பத்திரன மேற்கொண்டார்.
காட்டு யானை தாக்கியதில் நெஞ்சு மற்றும் வயிற்றில் பல இடங்களில் காயம் ஏற்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

