கொழும்பு துறைமுகத்தில் நின்ற கப்பலில் களவாக ஏறி வெளிநாடு செல்ல முற்பட்ட யாழைச் சேர்ந்தவர்களுக்கு நடந்த கதி!!
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை காலி துறைமுக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமானாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் இவர்கள் என தெரிய வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி சந்தேகநபர்கள் குழு மறைந்திருந்துள்ளது.. பின்னர் கப்பல் பயணிக்கத் தொடங்கிய நிலையில் கப்பலின் கப்டன், சூயஸ் கால்வாய் அருகே இந்த சந்தேக நபர்களை கவனித்தார்.
பின்னர் கப்பலின் கப்டன் கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்து சந்தேக நபர்களை இலங்கைக்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, இலங்கைக்கு வரும் மற்றுமொரு கப்பலில் சந்தேகநபர்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், குறித்த கப்பல் சந்தேகநபர்கள் நால்வரையும் காலி துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளையதினம் காலி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

