புதினங்களின் சங்கமம்

“சிவபெருமான் யாருடைய ஆள் ?” ஆறுதிருமுகனிடம் விசாரித்த பாதுகாப்பு தரப்பு!

சிவபெருமான் யாருடைய ஆள் என பாதுகாப்பு தரப்பு தன்னிடம் விசாரணைகளை முன்னெடுத்து இரண்டு பக்கங்களில் அறிக்கை எழுதி சென்றதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின்  தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை இன்றைய தினம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில்  சிவலிங்கத்தினை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் தீர்மானித்திருந்தோம்.

அதனடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது , பாதுகாப்பு தரப்பினர் வந்து பலதடவை விசாரணை மேற்கொண்டார்கள்.

“இது ஒரு கோவில் சைவ கோவில் இந்துகளின் தெய்வமாகிய  சிவபெருமானின் அடையாளமாக சிவலிங்கம்  தான் இங்கே வைக்கப் போகின்றோம்” என கூறினோம்.

 அப்போது அவர்கள் கேட்டார்கள் “சிவபெருமான் என்றால் அவர் யாருடைய ஆள்?” என, அதற்கு நாங்கள் “அவர் தான் எங்களுடைய பரம்பொருள் என கூறினோம். அதனை தொடர்ந்தும் சில கேள்விகளை கேட்டு அதை  இரண்டு பக்கங்களில் எழுதிச் சென்றார்கள்.

அவ்வாறு பல விசாரணைகளுக்கு நாங்கள் முகம் கொடுத்து,  ஒரு சிவபெருமானின் அடையாளமான  சிவலிங்கத்தினை   யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கு  பல இடர்பாடுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கின்றது.

யுத்த காலத்தில் கூட எமது இந்து மதத்தை கட்டி காத்து வந்த நாம் தற்போது சிவன் சிலைகளை பல இடங்களில் வைப்பதன் மூலமே இந்து மதத்தின் அடையாளங்களை  பாதுகாத்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக இந்த பகுதியில்  மூன்று ஏக்கர் காணியினை கொள்வனவு செய்துள்ளோம். அதற்கு உதவிய அரச திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு இந்த வீதியினால் பயணிக்கும் அடியவர்கள்  சிவலிங்கத்தை  வணங்கி யாழ்ப்பாண நகருக்குள் பிரவேசிப்பதற்கு ஏற்ற வாறாக ஒரு புனிதத் தன்மையோடு இந்த இடத்தினை பேணுவதற்காக,  கருங்கல்லிளான 7 அடி சிவலிங்கத்தினை அமைத்து, நித்தம் ஒரு பூஜை வழிபாடுகளும் இடம் பெறக்கூடியவாறு ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம் என்றார்.