கொழும்பில் உள்ளாடை விற்பனை விளம்பரம் கொடுத்து 100ற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அலங்கோலம் செய்தவன் கைதானது எப்படி?
100க்கும் மேற்பட்ட பெண்களின் முகநூல் கணக்குகளை ஊடுருவி அவர்களின் புகைப்படங்களை திருடி, அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார்.
பிரபல வர்த்தக நாமங்களின் கீழ் தயாரிக்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளை விற்பனை செய்யும் முகநூல் பக்கமென போலி பேஸ்புக் பக்கத்தை திறந்து வைத்து சந்தேகநபர் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார்.
முகநூல் கணக்கின் ஊடாக உள்ளாடைகளை கொள்வனவு செய்வதற்காக, பல யுவதிகள் ஓர்டர் செய்துள்ளனர்.
அந்த யுவதிகளை சந்தேகநபர் தவறாக வழிநடத்தி அவர்களது பேஸ்புக் கணக்கின் கடவுச்சொற்களை திருடியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதவானிடம் தெரிவித்துள்ளது.
“கடவுச்சொல்லைத் திருடிய பின்னர், சந்தேக நபர் அந்த முகநூல் கணக்குகளுக்குள் நுழைந்து அவற்றில் உள்ள தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களைச் சேகரித்து அவற்றை வெளியிடப் போவதாக பெண்களை அச்சுறுத்தியுள்ளார்” என்று சிஐடி தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஏழு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
நீதவான், மேலதிக விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
