புதினங்களின் சங்கமம்

அபுதாபியில் செல்வராணி குடும்பத்திற்கு கிடைத்த அதிஸ்டம்!!

வெளிநாட்டில் தமிழ்ப்பெண்ணிற்கு மில்லியனர் டிராவில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள சம்பவத்தின் சுவாரசிய பின்னணி வெளியாகியுள்ளது.

அபுதாபியில் வசிப்பவர் செல்வராணி. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அபுதாபியில் உள்ள லூலு மாலில் குறைந்தபட்சம் Dh200க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்படும்.

இப்படி செல்வராணி சேகரித்து வைத்திருந்த 80 கூப்பன்களில் அவருக்கு ஒரு கூப்பனுக்கு Dh1 million (ரூ.9,82,52,277.32) பரிசு விழுந்தது. இருப்பினும் இந்த தகவலை செல்வராணியிடம் உடனடியாக மால் நிர்வாகத்தால் சொல்ல முடியவில்லை.

ஏனெனில் விடுமுறைக்காக அவர் தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தார். அவரை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அதிர்ஷ்டவசமாக வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செல்வராணி அபுதாபியில் உள்ள தனது கணவர் அருள்சேகருக்கு தகவல் தெரிவித்தார். அருள்சேகர் கூறுகையில், கூப்பன்கள் என் மனைவி செல்போன் எண்களில் தான் பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அவரை செல்போன் அழைப்பில் அவர்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு தகவலை சொன்னார்கள். முதலில் யாரோ தங்களை பரிசு விழுந்ததாக சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்றே சந்தேகப்பட்டோம்.

பின்னர் தான் உண்மை தெரிந்தது. நாங்கள் 14 ஆண்டுகளாக அபுதாபியில் வசிக்கிறோம். பரிசு பணத்தை வைத்து எங்கள் பிள்ளைகள் கல்விக்காக செலவிடுவதோடு, ஏழைகளுக்கு உதவவும் விரும்புகிறோம் என கூறியுள்ளார்.