புதினங்களின் சங்கமம்

யாழ்.நகரை அண்மித்த சோமசுந்தர அவனியூ வீதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை..!

யாழ்ப்பாணத்தில் 72 வயது மூதாட்டியொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 16, இராசாவின் தோட்ட வீதி பகுதியில் இன்று மதியம் 12 – 1 மணிக்கிடையில் இந்த சம்பவம் நடந்தது.

மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (72) என்பவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கொலையாளி தப்பிச் சென்றுவிட்டார்.

மாடி வீட்டின் கீழ் தளத்தில் மூதாட்டி தனித்து வசிக்கிறார். மேல் மாடியில் பல்கலைகழக மாணவர்கள் சிலர் தங்கியிருந்து கல்வி கற்கிறார்கள்.

இன்று வீட்டிற்கு வேலையாள் வருவார் என கூறி, அயல்வீட்டிலிருந்து கத்தி, கோடாரியென்பன வாங்கியிருந்தார்.

இன்று பகல் 10.30 மணியளவில் பல்கலைகழக மாணவன் ஒருவர் வீட்டுக்கு வந்து போனபோது, மூதாட்டி வீட்டிலிருந்தார். பின்னர் மதியம் சடலமாக காணப்பட்டார். தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்ட வேலையாள் வந்து சென்றாரா, அவர்தான் கொலையை செய்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

மூதாட்டி வழக்கமாக கழுத்தில் தங்கச்சங்கிலி அணிவார் என்றும், தற்போது அதை காண முடியவில்லையென்றும் அயலவர்கள் குறிப்பிடுகிறார்கள்.