யாழ் கொடிகாமத்தில் மின் துண்டிப்பு வேளையில் பட்டா வாகனத்தை பந்தாடிய ரயில்!! ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தின் போது படுகாயம் அடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தவசிக்குளம், கொடிகாமம் என்ற முகவரியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய சூசைநாதன் பிரதீபன் (சுரேன்) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கொடிகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள தொடருந்துக் கடவையில் இடம்பெற்றுள்ளது.
தொடருந்தால் மோதித் தள்ளப்பட்ட வாகனம் சிதைந்து போய் காணப்படுவதாக பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தொடருந்து கடவையை பட்டா ரக வாகனத்தில் கடக்க முற்பட்டபோதே விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே அவர் உயிரிழந்ததாகவும் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மின்தடை ஏற்பட்டுள்ளமையால் தொடர்ந்து தொடர்பு சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக தொடருந்துத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் கொடிகாமம் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


