புதினங்களின் சங்கமம்

யாழில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட குருநகர் இளைஞனை புறுாஸ்லீ போல் சித்தரித்து நடந்த மரணச்சடங்கு!! பெருமளவானோர் கலந்த காட்சிகள்!! (Video)

யாழ்ப்பாணம், குருநகரில் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பெருமளவானவர்கள் ஊர்வலமாக சென்று இறுதிக்கிரியைகள் நடந்தன. பாடை கட்டி, நிலப்பாவாடை விரிக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. உயிரிழந்த இளைஞனை தற்காப்பு கலை மன்னன் புரூஸ்லியாக சித்தரிக்கும் சுவரொட்டிகள் குருநகரின் அனேக பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.

குருநகர் திருச்சிலுவை சுகநல நிலையத்திற்கு அண்மையில் கடந்த 22ஆம் திகதி நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் எட்மண்ட் ஜெரன்ஸ் (24) என்ற இளைஞன் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் 24ஆம் திகதி உயிரிழந்தார்.

குருநகர்- பாஷையூர் குழுக்களிற்கிடையிலான “வரலாற்று சிறப்பு“ வாய்ந்த நீண்டகால மோதலின் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்தது. பாசையூரை சேர்ந்த கெமி குழு என்ற குற்றக்கும்பலினால் திட்டமிட்டு இந்த கொலை நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞனிற்கு மேற்கொள்ளப்பட்ட 2 பிசிஆர் பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நேற்று முன்தினம் சடலம் தகனம் செய்யப்பட்டது.

இளைஞனின் அஸ்தி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரிகைகள் செய்யப்பட்டது.

இளைஞன் கொல்லப்பட்டதை தொடர்ந்து கிராமத்தில் உருவான கொந்தளிப்பான நிலைமையை கருத்தில் கொண்டு, நிலைமையை சுமுகமாக்கிய பொலிசார், சிறிய எண்ணிக்கையானவர்களுடன் இறுதிச்சடங்கை செய்ய அனுமதித்தனர்.

எனினும், அதை கணக்கில் கொள்ளாமல் ஏராளமானவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இறுதிச்சடங்கில் அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாடை கட்டி , வெடி கொளுத்தி , நில பாவாடை விரித்து , மேளங்களுடன் இளைஞனின் அஸ்தியை வீட்டிலிருந்து கொட்டடி மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

புரூஸ் லீயின் படத்துடன் இணைக்கப்பட்ட இளைஞனின் படங்களும் குருநகரில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. அஸ்தி அடக்கம் செய்யப்பட்ட பின்னர், புறாக்களும் பறக்க விடப்பட்டன.