புதினங்களின் சங்கமம்

யாழ் கொக்குவில் பகுதியில் நேற்றிரவு தாக்குதல் நடத்தியவர்கள் கைது!!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்திய ரௌடிகள் மூவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடை முன்பாக வந்த அடாவடி குழுவினர் பெற்றோல் போத்தலை எறிந்து தீமூட்டியதுடன் கடைஉரிமையாளரின் மனைவியின் மீதும் வாளால் வீச முற்பட்டுள்ளனர்.

எனினும் தெய்வாதீனமாக குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்த நிலையில் அலறல் சத்தத்தையறிந்து கடையின் பின்புறம் நின்றவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோது தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாதிகாரி விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் தாக்குதலுடன் தொடர்புடைய மூவரும் இன்று கைதாகினர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 2 பேரும், வசாவிளான் பகுதியை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.