புதினங்களின் சங்கமம்

யாழில் வீதியால் சென்ற மாணவியின் சங்கிலியை அறுத்த கொள்ளையார்கள்!! (Video)

வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. நேற்று வெளிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் வட்டுக்கோட்டை – மாவடி கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் பொன்னாலையைச் சேர்ந்தவரும் வட்டு. இந்துக் கல்லூரியின் மாணவியுமான ஒருவரின் தங்கச் சங்கிலியே அறுத்துச் செல்லப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மேற்படி மாணவியும் அவரது நண்பியும் பல்கலைக்கழக உளச்சார்பு பரீட்சைக்கு தோற்றுவதற்காக சங்கானை வங்கி ஒன்றில் பணத்தைச் செலுத்திவிட்டு வீடு திரும்பியபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் வைத்திருக்க மற்றையவர் மாணவியை துவிச்சக்கரவண்டியுடன் தள்ளி வீழ்த்திவிட்டு கழுத்தில் உள்ள சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார்.
மாணவி கூக்குரலிட்டவாறு நீண்ட நேரம் போராடியபோதிலும் எவரும் உதவிக்கு வராத நிலையில் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டது.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அப்பகுதி வீடொன்றில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
(படம்- இவர்கள்தான் சங்கிலி அறுத்தவர்கள், கமராவில் பதிவான காட்சி)