பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருக்கு விளக்கமறியல்!
வவுனியா நீதிமன்றால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று ஆயராகிய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் நவம்பர் 6 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்க ப்பட்டது. கடந்த நவம்பர் 6 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினர் நீதி மன்றில் மீண்டும் ஆயராகிய நிலையில் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அனேகமான வழக்குகள் விசாரணைகளிற்கு அழைக்கப்படாமல் தவணை இடப்பட்டிருந்தது. அந்தவகையில் 2021 ஆம் வருடம் தை மாத்த்திற்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கினை முன்னமே அழைக்குமாறு தொல்பொருட்திணைக்களம் சார்பாக ஆயராகிய சட்டதரணிகளால் நீதி மன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.
எனினும் வழக்கின் திகதி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர் நீதி மன்றிற்கு சமூகமளித்திருக்கவில்லை. அன்றையதினம் அவர்களது பிணையும் ரத்தாகியிருந்தது.இதனால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதி மன்றால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் வழக்கு தவணைக்காக ஆயராகிய ஆலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பூசகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



