புதினங்களின் சங்கமம்

மீன்பிடி வலையில் குண்டு!! பருத்தித்துறையில் அதிஷ்டவசமாக தப்பிய மீனவர்கள்!!

யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் மீனவர்களால் மீன்பிடி வலையில் இணைத்து பயன்படுத்திய குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டு இன்று மீட்கப்பட்டுள்ளதையடுத்து குறித்த மீனவர்கள் அதிஷ்டவசமாக தப்பித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இது குறித்து தெரியவருகையில்,

வடமராட்சி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டடிப் பகுதியில் இருந்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை (07) மாலை அப்பகுதியில் குண்டு ஒன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிசார், இராணுவத்தினர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதையடுத்து பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு குண்டு மீட்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள குண்டானது குறித்த மீனவர்களால் மீன் பிடி வலையில் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த பொருள் குண்டு என்பதை அறியாது மீன்பிடி வலையில் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையிலேயே தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி நடவடிக்கையில் இதனை இணைத்து பயன்படுத்திய போது வெடித்திருந்தால் பெரும் அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என்பது தற்போது உணரப்பட்டுள்ள நிலையில் குறித்த மீனவர்கள் அதிஷ்டவசமாக தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.