யாழ்.பல்கலை; துணைவேந்தருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது கலைப்பீட சபை!
தமக்கான தடையினை நீக்கவேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் தொடராக துணைவேந்தர் மாணவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமைக்கு யாழ்.கலைப்பீட சபை எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த கூட்டம் இன்று மாலை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கின்றது.
மாணவர்களுக்கான தண்டனை யாழ்.பல்கலைக்கழக உயர்சபை உட்பட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டே அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் துணைவேந்தர் தன்னிச்சையாக மாணவர்கள் மீதான தடையை நீக்கியிருப்பது ஏற்புடையதல்ல என்றும் அந்த நடவடிக்கையை தாம் எதிர்ப்பதாகவும் குறித்த சபை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் தொடராகவே மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வருவதற்கான சூழல் ஏற்பட்டதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.
முன்னைய செய்தி
பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டமைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இரண்டு நாட்களாக போராட்டம் நடத்திவந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான அனுமதியை துணைவேந்தர் வழங்கியிருந்தபோதிலும் தமக்கு எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கவேண்டும், நிபந்தனை இன்றி அனுமதி வழங்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி போராட்டத்தினை கைவிட மறுத்திருந்தனர்.
இதனிடையே, இன்று பிற்பகல் கூடிய யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட உயர் அதிகாரிகள், துணைவேந்தர் மாணவர்களுக்கு அனுமதி வழங்க எடுத்த முடிவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் மாணவர்கள் நிபந்தனையிலிருந்து பின்வாங்கியிருப்பதாக தெரியவருகிறது.
அதனை அடுத்தே, துணைவேந்தர் பழரசம் வழங்கி போராட்டத்த முடித்து வைத்திருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

