புத்தளத்தில் திடீரென வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்! சுனாமியா?
புத்தளம் மாவட்டம் முத்துபந்தி தீவில் சுமார் மூன்றடி உயரமான கடல் நீர் தீடீரென கரை புகுந்ததாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த பகுதியிலுள்ள வீடுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளதால் அவசர நிலைமை ஏற்பட்டது.
மேலும், குறித்த தீவின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கல் வேலியில் இருந்த கற்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளதாகவும், கடல் அலையுடன் வந்த குப்பைகள் வீடுகளுக்கு அருகில் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் கூட இந்தளவு பாரிய அலைகள் ஏற்படும் என முன்கூட்டிய அறிவித்திருக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள மக்கள் சுனாமி ஏற்பட்ட போது கூட இந்தளவு கடல் நீர் தீவுக்குள் வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

