புதினங்களின் சங்கமம்

யாழ் வேலணையில் கிணற்றுக்குள் வீழந்து 3 பிள்ளைகளின் தந்தை பலி!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் மாற்றுவலுவுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெற்றுக்கிணறு ஒன்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் புளிங்கூடலைச் சேர்ந்த நவரத்தினம் ஜெயசீலன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார்.

தோட்டக் காணியில் மாடு பார்ப்பதற்காகச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பிவராத நிலையில் தேடிச் சென்றபோதே கிணற்றில் படுகாயம் அடைந்த நிலையில் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட அவர் ஊர்கவாற்றுறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக அருவியின் தீவகம் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நீர் வற்றியிருந்த கிணற்றில் விழுந்த அவரின் தலை கல்லுடன் மோதுண்டே அவர் படுகாயம் அடைந்ததாக கருதுவதாக அவரை மீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுவலுவுள்ளவரான அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்றும் அவருடைய துணைவியாரும் மாற்றுவலுவுள்ளவர் என்றும் தெரியவருகிறது.