புதினங்களின் சங்கமம்

முகக்கவசம் அணியாதவர்களைத் தடுத்து நிறுத்தி கடும் எச்சரிக்கையின் பின் விடுவிக்கும் பொலிஸார்!

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக முகக்கவசம் அணியாது பயணிப்பவர்களைத் தடுத்து நிறுத்தி கடும் எச்சரிக்கையின் பின் வவுனியாப் பொலிஸார் விடுவித்து வருகின்றனர்.

இலங்கையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு அரசு உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் பெரும்பாலான மக்கள் அரசின் உத்தரவைப் பொருட்படுத்தாது முகக்கவசம் அணியாது பயணிக்கின்றனர்.

இதையடுத்து வவுனியா மாவட்ட கொரோனாத் தடுப்புப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி.குருசிங்க தலைமையிலான பொலிஸார் இன்று முதல் வவுனியா பழைய பஸ் நிலையம் மற்றும் வவுனியா நகரப் பகுதிகளில் முகக்கவசம் அணியாது செல்பவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களைப் பதிவு செய்து கடும் எச்சரிக்கையின் பின் விடுவித்து வருகின்றனர்.

இவ்வாறு முகக்கவசம் அணியாது செல்வர்களை எச்சரிப்பது மாத்திரம் அல்லாது அவர்களது வாகனத்தை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு முகக்கவசத்தை வாங்கி அணிந்து விட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்து வருகின்றனர்.

கொரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் எடுத்துள்ள இந்த நடவடிக்கை வவுனியா மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.