புதினங்களின் சங்கமம்

101 பாடசாலை மாணவர்களின் பி.சீ.ஆர் முடிவுகள் வௌியானது!!

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி கல்வி கற்கும் பாடசாலையில் 101 மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 139 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரது மகள் உட்பட மொத்தமாக 708 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.