புதினங்களின் சங்கமம்

தியாக தீபத்துக்கு நினைவேந்தல் செய்யத் தடை; வடக்கில் உண்ணாவிரதம், ஹர்த்தால்!!

எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடைத் விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை நடத்தின.

இதன்போது, எதிர்வரும் 26ஆம் திகதி தியாகி திலீபனின் நினைவுகூரலை ஆலயங்களில் விசேட பூசைகள் மற்றும் வீடுகளில் இருந்தவாறு மக்கள் அனுஷ்டிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதவடைப்புப் போராட்டத்துக்கு, சமூக சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்க வெண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மொழியைப் பேசும் முஸ்லிம் மக்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.