மர்மப் பொதி வெடித்தது! வல்லைவெளியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி காயம்!
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லைவெளிப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் வெடிபொருள் என்று நம்பப்படும் மர்மப் பொதி ஒன்று வெடித்ததில் காயம் அடைந்துள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் இன்று மாலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அவ்வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் பொதி ஒன்றை விழுத்திவிட்டுச் சென்றிருக்கின்றார்.
அதனை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை பிரிக்க முற்பட்டபோது அது வெடித்துச்சிதறியுள்ளது.
காயமடைந்த அவர் இராணுவத்தினரின் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

