நினைவேந்தலுக்கு தடை கோரும் பொலிஸாரின் மனுவை நிராகரித்தார் யாழ்.நீதிமன்ற நீதிபதி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுத்தால் அதனைத் தடுப்பதற்கும் நிகழ்வில் பங்கேற்பவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்தில் கைது செய்வதற்கும் அனுமதி வழங்குமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கல் செய்த வழக்கினை யாழ்.நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர் போல் நிராகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
குறித்த வழக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை நீதிவான் ஒத்திவைத்தார்.
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ஒன்றுதிரட்டி அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நாளையும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்டு அந்த நிகழ்வுகளை நடத்தத் தடை உத்தரவு வழங்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ விண்ணப்பம் செய்தார்.
இந்த விண்ணப்பத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர், சட்டத்தரணிகள் நடராசா காண்டீபன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் மற்றும் வரதராசா பார்த்திபன், வாசுகி, கிருபாகரன், தனுஷன், விஷ்ணுகாந்த் மற்றும் தமிழ்மதி ஆகிய 11 பேரின் பெயர்கள் இடப்பட்டு அவர்கள் நிகழ்வை நடத்தத் தடை உத்தரவு வழங்குமாறும், அவர்களை தனிமைப்படுத்துமாறும் பொலிசாரால் கோரப்பட்டது.
விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட 11 பேரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ஒன்றுதிரட்டி அஞ்சலி நிகழ்வுகளை நடத்துகின்றனர் என்று காணொலி பதிவுகளை பொலிஸார் சமர்ப்பித்தனர்.
நாம் அவர்களை சமூக இடைவெளியைப் பேணுமாறு கேட்டுக்கொண்டால், எம்மை நீதிமன்றம் செல்லுமாறும் தாம் நீதிமன்றில் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்டு நாளைய தினம் ஒன்றுதிரண்டு அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவிடவேண்டும் என்று பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.
பொலிஸாரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த நீதிவான், தனிமைப்படுத்தல் சட்டத்தை கடைபிடித்து அஞ்சலி நிகழ்வுகளை நடத்த அனுமதியளிக்க உத்தரவிட்டார். அஞ்சலி நிகழ்வை தடை செய்ய முடியாது, அஞ்சலி நிகழ்வில் தனிமைப்படுத்தல் சட்டத்தை பேணுவதை பொலிசார் உறுதிசெய்ய வேண்டும், நிகழ்வில் கலந்து கொள்பவர்களிற்கு அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி, அதை ஒழுங்கமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன், பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை நீதிவான் ஒத்திவைத்தார்.

