புதினங்களின் சங்கமம்

ஊரடங்கு அமுலில் இருந்தாலும் வழமைக்குத் திரும்புகிறது நாடு! ஜனாதிபதி செயலகம் விளக்கம்!!

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு என ஜனாதிபதி செயலகம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது?

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும். ஏனைய மாவட்டங்களில் இன்று (04) திங்கட்கிழமை தொடக்கம் மே 06ஆம் திகதி, புதன்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

இம்மாவட்டங்களில் மே 06 புதன், இரவு 8.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

02.ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் வழமை நிலைக்கு கொண்டுவருதல் எப்போது ஆரம்பமாகும்? 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருதல் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (04) முதல் ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், இவ்வாரத்தில் 04 வார விடுமுறை நாள்கள் உள்ளதால் மே 11க்கு மாற்றப்பட்டுள்ளது.

03.இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் ஆரம்ப பணிகள் எவ்வாறு இடம்பெறும்? 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் மே 11 திங்கள் முதல் திறந்திருக்க வேண்டும். இதற்காக தற்போது முதல் திட்டமிடுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கோரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

தனியார் துறை நிறுவனங்கள் முற்பகல் 10.00மணிக்கு திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள், தொடருந்துகள் பயணிகள் போக்குவரத்துக்காக அரச, தனியார் துறையில் தொழிலுக்காக செல்வோருக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

04.ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள போது வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு எத்தகைய விடயங்களுக்காக அனுமதி வழங்கப்படும்?

கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வீடுகளில் இருந்து வெளிச்செல்வது உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமேயாகும். தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களுக்கு ஏற்ப வீடுகளை விட்டும் வெளிச்செல்வதற்கு வழங்கப்படும். அனுமதி எப்பிரதேசங்களுக்கு ஏற்புடையது? எப்போது முதல்?

• ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டும். 

• மே 11 திங்கள் முதல் 

• ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேலையில் அது ஏற்புடையதாகாது

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படினும் மேற்படி அறிவுறைகளை பின்பற்றி மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கின்றது.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள போதும், பொருளாதார மற்றும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வரும் பணிகள் இடம்பெறுவதுடன், வைரஸ் பரவலை தடுப்பதற்காக மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதே இந்த ஏற்பாடுகளின் முக்கிய நோக்கமாகும்.

மேற்படி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஏலவே வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை – என்றுள்ளது.