புதினங்களின் சங்கமம்

ஊரடங்கால் உருக்குலைந்து போனது யாழ்ப்பாணம்! கீரை விற்கும் தாயின் உண்மைக் கதை!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் மக்கள் அன்றாட சீவியத்துக்கே அல்லல்படுகின்ற பரிதாப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வயோதிபத் தாய், தந்தையர்களின் பட்டினிகள் நிறைந்த சோகக் கதைகளில் ஒன்றுதான் கீழே தரப்படுகின்ற உண்மைச் சம்பவம். இது ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்துக்குமான உதாரணம்.

”இன்று மருதனார்மடத்தை அண்டிய பகுதியில் உணவு வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த போது சந்தியை அண்மித்து ஒரு வயோதிப தாய் நின்று போவோர் வருவோரை தன்னை ஏற்றி செல்லுமாறு கேட்ட வண்ணம் இருந்தார். ஆனால் யாரும் அவரின் வயோதிப நிலையைக் கண்டோ என்னமோ ஏற்றவில்லை.

சரி ஏற்றி செல்லுவோம் என நினைத்து அருகில் சென்ற போதும் மனதில் ஒரு பயம், ஏற்றிச் செல்லும் போது தவறி விழுந்தால், ஆனாலும் மனதில் இரக்கம் இருந்ததால் ஏற்றி சென்றேன்.

செல்லும் வழியில் கையில் உள்ள பையில் இரண்டு கீரை இருந்ததால் அந்த அம்மாவிடம் “என்ன அம்மா கீரை வாங்கி கொண்டு போறீர்களா? அல்லது கீரை விக்கிறீங்களா?” என்றேன்.

“விக்கிறனான் மோனை இன்று 25பிடி வாங்கி 14மிச்சம் சனம் இல்லை தானே நின்று நின்று பார்தேன் மணி ஒன்றை தாண்டி விட்டது தண்ணி வெண்ணியும் இல்லாமல் இருந்தது தலை சுத்துது. இனி போய் தான் சாப்பாட்டுக்கு வழி பார்க்கனும் அவரும் நானும் தான் இருக்கிறம் அவருக்கும் ஏலாது நான் தான் 15வருடமா கீரை விற்று ஏதோ வாழக்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறன் ஏதோ ஒரு முகாம் பெயரைச் சொல்லி(மறந்து விட்டேன் ) அங்க தான் மகளின் காணிக்குள் கொட்டில் போட்டு இருக்கிறன் மகளுக்கும் மூன்று பிள்ளைகள் மருமகன் மேசன் வேலைக்கு போறவர் இப்ப அவர்களுக்கும் வேலை இல்லை. எல்லாருக்கும் சரியான கஸ்டம் என்ன செய்வது. கீரையாவது விற்று இருந்தால் இன்றைக்கு சந்தோசமாக இருந்திருக்கும்” என ஒரு மணி உச்சி வெயிலுக்குள் சொல்லி நாதளதளத்தார்.

எங்களோடு பயணிக்கும் நல்ல உறவு ஒருவர் தன் பெயரோ நாடோ வெளிப்படுத்த வேண்டாம் நான் எப்போதும் உங்களுக்கு உதவி செய்வேன் என கூறி 186000சொச்சம் அனுப்பி இருந்தா. அதில் இருந்து இன்றைய உடனடி தேவைக்கான பணத்தை வழங்கி இனி ஒரு மாதத்திற்கான உலர் உணவுகள் வழங்கி வைப்போம். இது போல இன்னும் எத்தனை எத்தனை பிரச்சினைகளோ???
– Yarl Aid