புதினங்களின் சங்கமம்

யாழ் மத்தியகல்லுாரி மாணவர்கள் 50 பேர் பொலிசாரால் கைது!!

யாழ் மத்திய கல்லூரியின் 50 மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையில் “வடக்கின் போர்” என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டி நடைபெறவுள்ளது.

அதனை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை சீருடையில் , பாடசாலை கொடிகளுடன் பாண்ட் வாத்தியங்கள் இசைத்தவாறு வடி ரக வாகனங்களில் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்களின் கொண்டாட்டங்களால் வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததால் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடங்களுக்கு விரைந்த பொலிசார் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகளின் போது குறித்த பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடைகளுடன் பாடசாலை கொடிகளை அசைத்தவாறு வீதிகளில் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். வர்த்தக நிலையங்களுக்கு சென்று பண சேகரிப்பிலும் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுவதும் உண்டு.

அதேவேளை தமது சகோதர பாடசாலைகளான பெண்கள் பாடசாலைகள் முன்பாகவும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். பாடசாலை நேரங்களில் பாடசாலையை விட்டு சீருடையுடன் வெளியேறும் மாணவர்கள் வீதிகளில் இவ்வாறான கொண்டாடங்களில் ஈடுபட்டு வருவது தொடர்பில் வருடாவருடம் பாடசாலை அதிபர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் நிலையிலும் அது தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது பாடசாலை அதிபர்கள் திணறி வருவது குறிப்பிடத்தகது.