புதினங்களின் சங்கமம்

பண்ணையில் சிங்கள பல்கலைக்கழக மாணவி கொலையில் பின்னணி இதோ!!

பல்கலைகழக சிங்கள மாணவியொருவர் நேற்று முன்தினம் (22) பண்ணை கடற்கரையின் உடற்பயிற்சி நடைபாதையில் கழுத்தறுத்து கொல்லப்பட்டிருந்தார்.

யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவபீட மூன்றாமாண்டு மாணவியான ஹபுஹெட்டிகே டொன் ரோஷானி காஞ்சனா (29) என்பவரே கொல்லப்பட்டார். பதனகொட கொலனி, பேருவளையை சேர்ந்தவர்.

சம்பவ தினத்தில் இளம் ஜோடியொன்று, உச்சிவெயில் நேரம் கடற்கரையோரமாக மெதுமெதுவாக நடந்தபடி உரையாடிச் சென்றதை அங்கிருந்த சிலர் அவதானித்தனர். எனினும், அவர்களின் உரையாடல் சுமுகமாக இருக்கவில்லை, முரண்பட்டு கொண்டதை அங்கிருந்தவர்கள் அவதானித்தனர். பொதுமக்கள் தம்மை அவதானிப்பதையடுத்து, அவர்கள் அங்கிருங்து விலகிச் சென்று, உடற்பயிற்சி நடைபாதையோரம் கதைத்துக் கொண்டிருந்தபோது , திடீரென அந்த யுவதியின் அலறல் சத்தம் கேட்டபோது, அங்கிருந்த சிலர் அந்தப்பக்கம் பார்த்தபோது, யுவதியின் கழுத்தை அறுத்து, கடலுக்குள் ஒரு இளைஞன் தள்ளிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வதை அங்கிருந்தவர்கள் கண்டனர்.

ஓரிரு இளைஞர்கள் மட்டுமே, அந்த இளைஞனை பின் தொடர்ந்தனர். பின்னர் அவர் விரட்டிச் செல்லப்பட்டு, பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையாக பிடிக்கப்பட்டார். அங்கு வைத்து நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கொல்லப்பட்ட யுவதியின் கணவனான மத்துமகே டொன் எரங்க திலீப் குமார (30) என்பது தெரிய வந்தது. பேருவளையின் கண்டகமவை வசிப்பிடமாக கொண்டவர். அவர் பரந்தனிலுள்ள 662வது பிரிகேட்டின் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய லான்ஸ் கோப்ரல்.

2017ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பதிவுத் திருமணம் நடந்தது. சிறிதுகாலத்திலேயே அவர்களிற்கிடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. யுவதியின் பிறிதொரு காதல் உறவு காரணமாகவே கொலை நடந்ததாக சந்தேகநபர் வாக்குமூலமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட யுவதியின் சகோதரனும், கொழும்பு பல்கலைகழகத்தின் மருத்துவபீட மாணவனாக உள்ளார். தந்தையார் களுத்துறையிலுள்ள அரச அலுவலகமொன்றில் ஊழியராக கடமையாற்றுகிறார்.
பண்ணை கடற்கரையில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவி ரோஷினி காஞ்சனாவின் உடல் இன்று அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பேருவளையிலுள்ள, பதனகொட பகுதியில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல், நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக ஊடகங்களால் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த கொலை விவகாரம் நாடளாவிய ரீதியில் கவனயத்தையீர்த்த விவகாரமாக மாறியிருந்தது. இதனால் இன்று, கொல்லப்பட்ட மாணவியின் வீட்டில் அதிக ஊடகங்கள் மொய்த்திருந்தன.

தமது மகளிற்கு என்ன நடந்தது என அரற்றியபடி தாயார் இருந்ததாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

ரோஷினி (29) தனது கணவனால் கொல்லப்பட்டிருந்தார். கிளிநொச்சி, பரந்தனில் உள்ள 662வது படையணியில் கடையாற்றும் கோப்ரல் தரமுடைய இராணுவ வீரரான கணவன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவி ரோஷினி பதனகொட வித்யாலயம், சேனநாயக்க கல்லூரி மற்றும் மத்துகம மத்திய கல்லூரியில் தனது அடிப்படைக் கல்வியை முடித்த பின்னர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நுழைந்து இறுதி ஆண்டு படித்து வந்தார்.

ரோஷானியின் தாயார் பிரேமலானி அழுதபடி,

“என் மூத்த மகள் இறந்துவிட்டாள். என் குழந்தைக்கு என்ன நேர்ந்தது? ஒவ்வொரு நாள் மதியம் 1.30 மணிக்கு தொலைபேசியில் அழைத்து, தான் மதியம் சாப்பிட்டு விட்டேன் என சொல்வார். என்னை சாப்பிடச் சொல்வார். 22ம் திகதி தொலைபேசி அழைப்பு வரவில்லை. அதனால் நானே தொலைபேசி அழைப்பேற்படுத்தினேன். யாழ்ப்பாண பொலிசார் பேசினர்.

தொலைபேசிக்குரிய பெண்ணின் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் சொன்னார்கள். எனது நெஞ்சம் வெடிப்பதை போலிருந்தது. அடுத்த ஏழு மாதங்களில் வைத்தியராக இருந்த என் மூத்த மகள். விலைமதிப்பற்ற வளத்தை இழந்துவிட்டோம்” என்றார்.

உயிரிழந்த மாணவி 31.12.2016 அன்று குடும்பப் பிரச்சினைகளுடன் திருமணம் செய்து கொண்டார்கள். இரண்டு வீட்டிலும் திருமணத்திற்கு ஆதரவிருக்கவில்லை. அதனால் அப்போது பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

உயிரிழந்த மாணவி தனது சகோதரன், இரண்டு சகோதரிகளில் மிக அன்பாக இருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். அவரது சகோதரனும் மருத்துவபீடத்தில் கல்வி கற்றார்.

ரோஷனி காஞ்சனாவின் மூத்த சகோதரர் ரோஷன் கலான (26),

நான் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டில் படித்து வருகிறேன். தற்போது கலுபோவில போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்று வருகிறேன். ஒரு அத்தை அழைத்தபோது என்னால் நம்ப முடியவில்லை. நானும் என் சகோதரியும் இன்னும் சில மாதங்களில் வைத்தியர்களாக இருக்கிறோம்.

உயர்தர பரீட்சை முடிவில் நான் களுத்துறை மாவட்டத்தில் 9வது இடம். அவள் 21 வது இடம்.

கணவனிடமிருந்து அவளுக்கு நிறைய துன்புறுத்தல்கள் இருந்தன. எங்கள் குடும்பத்தினருடனான தொடர்பை நிறுத்த வலியுறுத்தி வந்தார். தொடர்பை நிறுத்தும்படி, சகோதரியின் இரண்டு தொலைபேசிகளை உடைத்தார்.

இடது கை விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. கத்தி வெட்டிலிருந்து தப்பிக்க கத்தியைப் பிடித்தாள். விரல்களை வெட்டியே, அந்த மனிதன் அவளது கழுத்தை வெட்டி, ஏரிக்குள் தள்ளியுள்ளான்“ என்றார்.

பேருவளை, பந்தனகொட கிராமத்தைச் சேர்ந்த முதல் மருத்துவரை இழந்துள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேவேளை, இருவருக்குமிடையில் அண்மைக்காலமாக எழுந்த முரண்பாட்டையடுத்து, விவாகரத்திற்கு ரோஷினி விண்ணபித்ததாகவும், அதை கணவன் விரும்பவில்லையென்றும், விவாகரத்து விடயத்தை பேசவே பண்ணைக்கு அழைத்து கொலை புரிந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்குமிடையிலான முரண்பாட்டையடுத்து, தனது சகோதரி துன்புறுத்தப்படுகிறார் என, மருத்துவபீட மாணவனான சகோதரனும் இந்த முரண்பாட்டில் தலையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவியின் இறுதி சடங்கு சனிக்கிழமை (25) மதியம் 2.00 மணிக்கு கலாவில காந்த பொது மயானத்தில் நடைபெறும்.<