வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில் தாயின் சடலமும், வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது மகனின் சடலமும் இன்றைய தினம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குறித்த வீட்டில் தாயும் அவரது பெறாமகனும் இருந்துள்ளனர். மாலை வேளையில் உறவினர்கள் இருவர் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பிரதான அறையில் தாய் இரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்
உடனடியாக தாயாரை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை, வீட்டின் மற்றொரு அறைக்குள் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த அலஸ்கிறின் (வயது 60) என்பவரே சடலமாக மீட்கப்பட்ட பெண்ணாவார். அத்துடன், அவரது பெறாமகனான அயந்தன் (வயது 35) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குடும்பத் தகராறு காரணமாக, குறித்த இளைஞர் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, பின்னர் தாமும் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினர் ஊடாக மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





