யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகிய இருவருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாகப் பணியாற்றிய ஊழியர்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்குப் பதிலாகப் புதிதாகப் பலர் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தனர்.
குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைக்காக, எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 3:00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்திற்குச் சமூகமளிக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, குறித்த முறைப்பாடானது விசாரணை செய்யப்படவுள்ளது.





