லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வரும் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நேற்று காலையில் லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நாமல் ராஜபக்ச ஆஜரானார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் கொள்முதல் தொடர்பான கொடுக்கல் வாங்கல் விசாரணைக்காகவே அவர் ஆஜராகியிருந்தார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக லஞ்ச ஆணைக்குழுவிற்கு வந்த நாமல் ராஜபக்ச, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே கைது செய்யப்பட்டதாக அவருடைய சட்டத்தரணிகளில் ஒருவரான நிஷாந்த தயானந்த தெரிவித்தார்.
காலஞ்சென்ற கபில சந்திரசேன அளித்த வாக்குமூலம்
எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இதற்கு மேலதிகமாக, குறித்த பணம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டது.
அதன்படி, 2015ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமைய, தலா 20 மில்லியன் ரூபா வீதம் மூன்று சந்தர்ப்பங்களில் மொத்தம் 60 மில்லியன் ரூபாவை பெலியத்த மற்றும் காரல்டன் இல்லங்களில் வைத்து மஹிந்த ராஜபக்சவிடம் வழங்கியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
மஹிந்த ராஜபக்ச லஞ்ச ஆணைக்குழுவில் ஆஜராதல்
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.
உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச லஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சந்தேகநபரான கபில சந்திரசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட தினத்தன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது சேவைபெறுநருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை குறித்து நீதவானுக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறினார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் என்றால் என்ன?
தமது நிறுவனத்தின் விமானங்களைக் கொள்முதல் செய்வது மற்றும் குத்தகைக்கு எடுப்பது தொடர்பான நீண்டகால ஒப்பந்தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், எயார்பஸ் நிறுவனம் இடைத்தரகர்களுக்குப் பல்வேறு வழிகளில் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2011 ஜூலை முதல் 2015 ஜூன் வரையிலான காலப்பகுதியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரின் மனைவியின் கணக்கிற்கு எயார்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கலுக்காக 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை லஞ்சமாக வழங்க எயார்பஸ் நிறுவனம் சம்மதித்திருந்ததாக நீதிமன்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2013 மார்ச் 29 அன்று எயார்பஸ் நிறுவனம் ஆறு A330 ரக விமானங்கள் மற்றும் நான்கு A350 ரக விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு விற்பனை செய்வதற்கும், மேலும் நான்கு A350 ரக விமானங்களைக் குத்தகைக்கு வழங்குவதற்கும் இடைத்தரகர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்திருந்ததாக நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொள்முதல் செய்யும் ஒவ்வொரு A330 விமானத்திற்கும் 1 மில்லியன் டொலரும், குத்தகைக்கு எடுக்கும் ஒவ்வொரு A350 விமானத்திற்கும் 1.16 மில்லியன் டொலரும் கமிஷன் தொகையாக இடைத்தரகருக்கு வழங்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அத்துடன், 2015 ஒக்டோபர் 30க்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வேறு எந்தப் போட்டியாளரான விமான நிறுவனத்திடமிருந்தும் விமானங்களைக் கொள்முதல் செய்யாவிட்டால், இடைத்தரகருக்கு மேலும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அந்த ஒப்பந்தத்தின் மூலம் எயார்பஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டிருந்தது.
இருப்பினும், எயார்பஸ் நிறுவனம் இடைத்தரகருக்கு, முன்னர் ஒப்புக்கொண்ட 16.84 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 2 மில்லியன் டொலர்களை மட்டுமே செலுத்தியுள்ளது.
2013 ஜூன் 19 பாரிஸில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின் போது எயார்பஸ் நிறுவனத்தின் A330 ரக விமானங்கள் 6 ஐ ஆர்டர் செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்திருந்ததாக நீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 6 விமானங்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால், 2013 ஜூன் 28 அன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனத்திற்கு இடையே எட்டப்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தின்படி ஆர்டர் செய்யப்பட்ட A350 ரக நான்கு விமானங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
தகவல்: BBC Sinhala





