முச்சக்கரவண்டி காருடன் மோதியதில் தாயும் 7 வயது சிறுமியும், முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழப்பு.!
தெல்கொட பகுதியில், கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பியகம பகுதியில் இருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி, திடீரென வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முற்பட்டபோது எதிர்திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஐவர் படுகாயமடைந்து உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதி, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகிய மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சாரதி 69 வயதுடைய தெல்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த 39 வயதுடைய பெண்ணும் 7 வயதுடைய சிறுமியும் சியம்பலாபே பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரில் பயணித்த சிறுமி ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும்.

