PickMe சாரதி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; தந்தை–மகனின் கொடூரங்கள் அம்பலம்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமகம, கலகஹேன பகுதியில் கடந்த 16ஆம் திகதி அதிகாலை கால்வாயில் இருந்து வாடகைக்கார் சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டவரின் மோட்டார் சைக்கிள், தங்க நெக்லஸ், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவையும் கொள்ளையிடப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில்,கொலையுண்ட ‘PickMe’ மோட்டார் சைக்கிள் சாரதி மற்றொரு நபரை ஏற்றிக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு வருவது தெரியவந்தது. அதன்படி நடத்திய விசாரணையில், அந்த நபரே மோட்டார் சைக்கிள் சாரதியுடன் அங்கு வந்து அவரைக் கொலை செய்தது என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இருவரும் தந்தையும் மகனும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை இடம்பெற்ற மறுநாளே, சந்தேக நபர்கள் குறித்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி மொரகஹஹேன பகுதியில் பெண்ணொருவரை கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி தங்க நெக்லஸை கொள்ளையிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், ஹோமகம, அவிசாவளை, கிரியுல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேக நபர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றும் 500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிள் மற்றும் இரத்தக்கறை படிந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் மகன் என்றும், அவர் தனது தந்தையுடன் இணைந்து இக்குற்றங்களைச் செய்துள்ளார் என்றும் பொலிஸாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெளிர் நீல நிற டெனிம் கால்சட்டை அணிந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் பயணித்தபோது தனது இராணுவ அடையாள அட்டையை காண்பித்து பொலிஸ் சோதனைச் சாவடிகளை தடையின்றி கடந்ததாகவும் சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (25) ஹோமகம பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச் செயல்களின் பின்னணியில் உள்ள பிரதான சந்தேகநபரான தந்தையைத் தேடி கைது செய்வதற்கான விசாரணைகள், ஹோமகம தலைமையக பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சமன் கமகே தலைமையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

