கிளிநொச்சி வைத்தியசாலையில் மயக்கத்தில் தாய்! களவு போன காது தோடு! பொலிசார் கூறிய விசித்திர காரணம்!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்
வருத்தம் வந்தா நகை போடாதீர்கள்,
களவு போனால் நீங்கள் தான் பொறுப்பு.‼️
சுயநினைவற்று இருக்கும் ஒரு நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் வைத்தியசாலைக்கு ஓடினால், அங்கே நோயாளியின் உடமைகளுக்கு பாதுகாப்பில்லை வேதனையளிக்கிறது.
எனது அம்மா சுயநினைவற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, யாரோ ஒருவரால் அவரது காதில் இருந்த தோடுகள் களவாடப்பட்டன. ஒரு நோயாளிக்குத் தற்காப்பு கூடச் செய்ய முடியாத நிலையில் இருக்கும்போது இந்தத் துரோகம் நடந்துள்ளது.
இதனைப் பற்றி வைத்தியசாலை அரச அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில், “நாங்கள் கழட்டவில்லை, நீங்கள் ஏன் நகையை அணிந்து வந்தீர்கள்? அது உங்கள் தவறு” என்கிறார்கள்.
அவசர காலத்தில் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது நகைகளைக் கழற்றிக்கொண்டிருப்பதா நமது முதல் வேலை?
சரி, முறைப்பாடு இடுவம் என்று பொலிசாரிடம் சென்றால், அங்கும் ஒரு விசித்திரமான நடைமுறை. சிகிச்சை பெற்று வரும், தன் காதில் இருந்து தோடு களவு போனதே தெரியாத நிலையில் இருக்கும் எனது அம்மாவையே நேரடியாக வந்து முறைப்பாடு (Complaint) செய்யச் சொன்னார்கள். சுயநினைவில்லாத ஒரு நோயாளி எப்படி நேரில் வந்து முறைப்பாடு செய்ய முடியும்? இது என்ன மாதிரியான நியாயம்?
வைத்தியசாலையின் நடைமுறைப்படி நகைகள் அணியக் கூடாது என்றால், அவசரப்பிரிவில் அனுமதிக்கும் போது என்னென்ன நகைகள் இருக்கின்றன என்று சரிபார்த்து, அதனைப் பொறுப்பேற்க வேண்டிய கடமை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இல்லையா?
என் அம்மாவின் தோடுகள் மட்டும் அல்ல, இந்த வைத்தியசாலையில் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், நிர்வாகமோ அல்லது அது சார்ந்த அதிகாரிகளோ முற்றிலும் அலட்சியமாகவே உள்ளனர்.
இனி அம்மாவின் தோடு வரப்போவதில்லை ஆனால் இன்னும் ஒரு தாயின் நகைக்கு இப்படி ஒரு நிலை வரவேண்டாம்.. அதனால் தான் தாமதமானாலும் இந்த பதிவை இடுகின்றேன்.
-வேல்.நயன்- —

