சினிமா காட்சிகளில் வரும் சித்திரவதை போல் நடந்த கொடூரம்! சடலமாக மீட்கப்பட்ட “பொடி லசி”யின் நெருங்கிய சகா!!
காலி, பொத்தல பகுதியில் உள்ள வக்வெல்ல பாலத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம், பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனான “பொடி லசி” என்பவரின் நெருங்கிய சகா ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபரம் தெரியவராத நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னரே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபரின் கைகளும் கால்களும் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொலையாளிகளால் அவரது முகம் மிகக் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டிருந்ததால், ஆரம்பத்தில் அவரது அடையாளத்தைக் கண்டறிவதில் பொலிஸாருக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டிருந்தது.
பகைமை காரணமாக கடத்தி வரப்பட்டு, சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட பின்னரே சடலம் இங்கு வீசப்பட்டிருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில், உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

