யாழில் விபத்து! சுகிர்தர் பலி!
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுகிர்தர் (48 வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த 14 ஆம் திகதியன்று பலாலி வீதியில் மேற்படி குடும்பஸ்தர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பிறிதொரு உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

