கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரம் செய்த பொலிஸ் அதிகாரி சிக்கியது எப்படி?
கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகருடன் 5 பேரை கிளிநொச்சி பொலிஸார் நேற்று முன்தினம் (28) கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது வீட்டில் 2700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மட்டக்களப்பை சேர்ந்தவர். யாழ்ப்பாணம் ஊர்க்காவற்துறை பொலிஸில் பணிபுரிபவர் என்பதும் அவர் கிளிநொச்சியில் உள்ள இந்த வீட்டிற்கு போதைப்பொருள் உட்கொள்வதற்காக வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது, போதைப்பொருள் வியாபாரி தவிர்ந்த ஏனைய நால்வரும் போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் தனது நண்பரான இந்த போதைப்பொருள் வியாபாரிக்கு வியாபாரத்தை பராமரிக்க உதவியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வியாபாரத்துடன் அவர் தொடர்புபட்டிருந்தது உறுதியானதையடுத்து, அவர் மீது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் வழக்கு தொடரப்படவுள்ளது.
சந்தேகநபர்கள் ஐவரையும் இன்று (30) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

