காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் 13 பேரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.





