பிரித்தானியாவில் பரீட்சை மோசடி செய்த தமிழ் ஆசிரியர் சந்தோஷ்குமாருக்கு நடந்த கதி!!
பிரித்தானியாவில் மாணவர்களின் அனுமதியின்றி மாற்றங்களை மேற்கொண்ட தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கற்றல் நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவன்றி பகுதியில் உள்ள மெடோ பார்க் பாடசாலையில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியராக பணியாற்றிய 36 வயதுடைய சாய்கிருஷ்ணன் சந்தோஷ்குமார் என்ற ஆசிரியருக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையின் போது மாணவர்களின் அனுமதியின்றி அவர்களின் பாடநெறி பணிகளில் மாற்றங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டிற்காக, கற்பித்தல் பணிகளில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில், BTEC தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவின் கீழ் பயின்ற 23 மாணவர்களின் பிரசண்டேஷன் ஆவணங்களில் மாணவர்களுக்குத் தெரியாமல் ஆசிரியர் தனது சொந்த விருப்பப்படி திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.
மாணவி ஒருவரின் ஆவணத்தில் ஆசிரியரின் முதலெழுத்துக்கள் இடம்பெற்றிருந்ததை கவனித்த சக ஆசிரியர் ஒருவர், இதனை கண்டுபிடித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த விசாரணையில் ஆசிரியர் 23 மாணவர்களின் கோப்புகளில் முறைக்கேடான மாற்றங்களை செய்தது டிஜிட்டல் பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
விசாரணை குழுவின் முன்பாகத் தான் மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட உதவிகளை மட்டுமே வழங்கியதாக அவர் வாதிட்ட போதிலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட அவர், கடந்த ஆண்டு ஜனவரியில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் உள்ள எந்தவொரு பாடசாலை அல்லது கல்வி நிலையத்திலும் கற்பிக்க இவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 2029 ஜூலை மாதத்திற்குப் பின்னரே இந்தத் தடையை நீக்குவது குறித்து விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

