மட்டு’வில் படிக்க சென்று தங்கியிருந்த வீட்டில் நகைகளைக் களவெடுத்த யுவதி பிடிபட்டது எப்படி?
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமையே களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.
உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இந்நிலையில் திங்கட்கிழமை (03) களவாடப்பட்ட பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்

