புதினங்களின் சங்கமம்

மன்னாரில் பொலிஸ்காவலில் இருந்த வவுனியாவைச் சேர்ந்த கபிலன் மரணம் ! நடந்தது என்ன?

மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 வயதுடைய நபர் ஒருவர் இன்றைய தினம் (03) காலை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று (2) மாலை போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரை பேசாலை பொலிஸார் துரத்தி பிடித்ததோடு, இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பின்னர் குறித்த நபர் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை குறித்த சந்தேக நபர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காலை 6.30 மணியளவில் சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.

இதனையடுத்து பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தையும் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.

குறித்த சந்தேக நபர் பேசாலை பொலிஸ் நிலையத்தின் முதலாம் இலக்க தடுப்புக் காவல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த குறித்த நபரின் தாய் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (3) காலை வருகை தந்து தனது மகனை பொலிஸார் அடித்துக் கொலை செய்துள்ளதாக அங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.