தொண்டமனாறு செல்வசந்நிதியில் பிச்சை எடுக்கும் பெண்களின் திருவிளையாடல்கள் இதோ!! அவதானவும் பக்தர்களே!!
நேற்றைய தினம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதிக்கு திருமண வைபவம் ஒன்றுக்காகப் போயிருந்தேன். எனது உறவினரான வயது முதிர்ந்த ஒருவரின் 5 பவுண் தங்கச் சங்கிலியைச் சன நெருக்கடியில் அறுத்து விட்டார்கள்.
நேற்று 60 சோடிகளுக்குத் திருமணம்.
கோயிலின் முன்புறமாக 3 பெண்கள் மடிப்பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முகங்கள் எமது பிரதேசத்திற்குரியவர்கள் அல்லவெனக் காட்டியது.
கைதடியில் சில வருடங்களுக்கு முன்பு கந்தசாமி கோயிலில் தேர்த் திருவிழாவன்று சங்கிலி அறுத்துப் பிடிபட்ட ஒருவரின் சாயல் அதில் தெரிந்தது.
ஒரு பெண்ணைக் கேட்டேன் ” நீங்கள் எந்த ஊர் ” அவர் தான் மட்டக்களப்பு என்றார்.
மட்டக்களப்பில் எந்த ஊர் எனக் கேட்டேன். காத்தான்குடி என்றார். காத்தான்குடி முஸ்லீம்கள் வாழும் ஊரல்லவா?
காத்தான்குடிக்கு போக முன்னுள்ள ஊர் எது? கடந்த பின்பு வரும் ஊர் எதுவெனக் கேட்டேன். தனக்குக் காத்தான்குடி மட்டும் தான் தெரியுமென்றார்.
படக்கென்று தான் மானிப்பாய் என்றார். உடனேயே சொன்னேன் நீ நேரத்திற்கொரு ஊர் சொல்கிறாய்.
மடிப்பிச்சை எடுக்கும் அடுத்த பெண்ணைக் கேட்டேன் நீங்கள் எந்த ஊர். நுவரெலியா என்றார். அங்கு எந்த ஊர் என்றேன். கொட்டகல என்றார். கொட்டகலவுக்கு அயல் ஊர்களைக் கேட்டேன். முழுசினார்.
அடுத்த பெண்ணைக் கேட்டேன் நீங்கள் எந்த ஊர் ? மானிப்பாய் என்றார். மானிப்பாயில் உங்கள் வீதி எது எனக் கேட்டேன்.
சுதுமலை வடக்கு என்றார். சுதுமலை வடக்கு உங்களது கிராம சேவகர் பிரிவு இலக்கம் என்னவெனக் கேட்டேன். 101 என்றார்.
ஆனால் அந்த இலக்கம் தவறு. 132 என நினைக்கிறேன்.
பின்னர் எனக்குத் தெரிந்த பொலிஸ் நண்பர் மூலமாக தொலைபேசி மூலமாக வல்வெட்டித்துறைப் பொலிசுக்கு முறைப்பாடு செய்தேன்.
பொலிஸ் வரும் வரையில் உறவினர்களாகிய நாம் அவர்களைச் சுற்றி ஒரு வலயம் அமைத்தோம்.
பொலிஸ் வந்து விசாரித்தனர். மானிப்பாய் சொன்ன பெண் தாய் ,மற்றைய இருவரும் மகள். அவர்களுடன் மடத்தில் நின்ற பெண்ணும் கைது செய்யப்பட்டனர். சோதித்ததில் 5 பவுண் தங்கச் சங்கிலி அவர்களிடம் இருக்கவில்லை.
இவர்கள் பெரிய ஒரு வலைப்பின்னல். உடனே பிடித்தால் சரி இல்லாவிட்டால் பொருள் வராது.
இவர்களது சொந்த ஊர் நீர்கொழும்பு புத்தள எல்லையிலுள்ளது. கொவிட் – 19 தடுப்பூசி அட்டை ,அடையாள அட்டைகளின் பிரதி காட்டியது.
கவனம் .உங்களது சூழலில் நவீன வடிவத்தில் இப்படியும் திருடர்கள் வருவார்கள் . உண்மை எது பொய் எதுவென இனம் காணுங்கள். சனநெரிசலைத் தவிருங்கள். சுகாதார இடைவெளி எல்லாமே வெறும் பேச்சாகப் போய் விட்டது.
வேதநாயகம் தபேந்திரன்

