யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!
உலகத்தின் பாரத்தைக் குறைப்பதற்காக பாரதப் போர் உட்பட பல போர்களை நடாத்தி ஏராளமான உயிர்களைப் பலியாக்கிய கிருஸ்ன பகவானின் அவதாரமாக மற்றொரு அவதாரமாக யாழில் வைத்தியர் ஒருவர் உருவாகி வருகின்றார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்குச் சென்ற குடும்பப் பெண்ணை வேலணை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லையென திருப்பி அனுப்பியதால் ஊர்காவற்றை வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் பரிதாபமாக பெண் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வேலணை மேற்கு பகுதியை சேர்ந்த குடும்பப் பெண்ணொருவருக்கு கடந்த பொங்கல்தினமான 14 ஆம் திகதி அதிகாலை வீட்டில் நீராடிய வேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் பெண்ணை முச்சக்கர வண்டிமூலம் அவசரமாக வேலணை பிரதேச வைத்தியசாலைக்குச் கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் கடமையிலிருந்த சிற்றூழியர் ஒருவர் வைத்தியர் இல்லையென்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் குறித்த வைத்தியசாலையில் கோபிக்கிருஸ்ணன் என்ற புதிதாக நியமனம் பெற்ற வைத்தியர் வைத்தியசாலை மருத்துவர்களுக்கான விடுத்தியில் தங்கியிருந்துள்ளார். வைத்தியசாலை பொறுப்பதிகாரி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு போன போது இவரே முழுநேர கடமையில் வேலணை வைத்தியசாலையில் நின்றிருந்ததாகவும் தெரியவருகின்றது.
மேலும் அதன்போது வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு நோயாளரை கொண்டு செல்வதற்கு அன்புலன்ஸ் வண்டி கோரப்பட்ட போதும் வைத்தியசாலையில் அன்புலன்ஸ் வாகனசாரதி இல்லையென தெரிவித்துள்ளனர். ஆனாலும் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் சாரதி நின்றிருந்ததாகவும் வைத்தியரின் அனுமதி இன்றி அம்புலனஸ் எடுக்க முடியாது என்ற காரணத்தால் அம்புலன்ஸ்சை அனுப்பவில்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அதேவேளை வைத்தியசாலையில் அருகில் அமைந்திருக்கும் பிரதேச செயலகத்தில் சேவையில் இருக்கும் 1990 அன்புலன்ஸ் வண்டியினை பெற்றுக் கொடுப்பதற்கும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நோயாளிக்கு வைத்தியசாலையால் எந்தவித முதலுதவி சேவைகளும் வழங்கப்படாத நிலையில் நோயாளரின் அவசர நிலைகருதி உறவினர்கள் அவசர அவசரமாக தாம் கொண்டுவந்த முச்சக்கரவண்டியிலேயே ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனாலும் இடைநடுவிலேயே பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டது. இதன்போது வேலணை மேற்குப் பகுதியை சேர்ந்த குடும்பப் பெண்ணாண திருமதி நித்தியா திருவருள் (வயது-46) என்பவரே மரணமடைந்தவராவார்.
வைத்தியசாலை நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே குடும்பப் பெண்ணின் மரணத்துக்கு காரணமாக அமைந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வைத்தியசாலை நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் மனிதாபிமானமற்றதாக காணப்படுவதுடன் குறித்த பெண்ணின் மரணத்துக்கு வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்புக் கூறவேண்டும் என தீவக சிவில் சமூகத்தின் செயலாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றையதினமும் மாலை 5 மணியளவில் பாம்புக்கடிக்கு சிகிச்சைபெறச்
சென்ற நோயாளரை வைத்தியர் உணவு அருந்தச் சென்றுள்ளதால் ஒரு மணிநேரம் தாமதிக்குமாறு வைத்தியசாலை பணியாளர்கள் தெரிவித்ததால் உறவினர்கள் பயத்தின் காரணமாக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மிகப் பின்தங்கிய தீவகப் பிரதேசத்தில் மருத்துவ சேவையினை துஸ்பிரயோகம் செய்பவர்கள் மீது பொதுநல வழக்கினை தொடர்வதன் மூலம் நீதியினை பெறுவதற்கு எதிர்காலத்தில் முயற்சிகள் எடுப்பதன் மூலம் பொறுப்பற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் பெருமளவான வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ வசதிகள் குறைந்த நிலையில் வைத்தியசாலைகள் காணப்பட்டாலும் மிகவும் சேவை மனப்பாங்குடன் கடமையாற்றி வருகின்ற போதும் கோபிக்கிருஸ்ணர்களைப் ஒரு சிலர் வைத்தியத்துறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பூமித்தாயின் பாரத்தைக் குறைக்க இவர்கள் பிறந்து வைத்தியசேவைக்குள் நுளைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. குறித்த கோபிக்கிருஸ்ணன் யாழ் நகரப்பகுதியில் விடுதி ஒன்றை நடாத்திவருவதாகவும் மருந்தகங்கள் தனியார் மருத்துவ சேவை போன்றவற்றையும் நடாத்தி வருவதாகவும் கடமை நேரத்திலும் குறித்த தனது தனிப்பட்ட வியாபாரங்களை தொலைபேசியில் கதைத்து நடாத்தி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

