புதினங்களின் சங்கமம்

செப்டம்பரில் பாடசாலைகளை மீள திறப்பது சாத்தியமில்லை -கல்வி அமைச்சர் பீரிஸ் –

திட்டமிட்ட வகையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமில்லை என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில், இவ்வாறான நிலையில் இணைய வழி கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இருப்பினும் ஆசிரியர்களின் பணி பகீஷ்கரிப்பு இதற்கு தடையாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதார தரப்பினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு, முன்னர் நாம் திட்டமிட்டிருந்தோம்.
இதேபோன்று ஆகஸ்ட் மாதம் இறுதிக்கு முன்னதாக, அனைத்து ஆசிரியர்களுக்கும், பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கும், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் பின்னர், செப்டெம்பர் மாத முதல் வாரத்திலிருந்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது என்றும் அமைச்சர் கூறினார்.
இவ்வாறான சூழ்நிலையில், முறைப்படுத்தப்பட்ட இணையவழி கற்பித்தல் முறைமை முக்கியமானதாகும்.
ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் முறைமையில் இருந்து விலகியுள்ளனர். இதனால் பாதிக்கப்படுபவர்கள் யார்? யாரை இவர்கள் பழிவாங்குகின்றனர் என்றும் கல்வி அமைச்சர் கேள்வி எழுப்பினார்